சிறிலங்காவில்
நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப்
போவதாக கனேடியப் பிரதமர் எடுத்துள்ள நிலைப்பாட்டையே, பிரித்தானிய பிரதமர்
டேவிட் கமரூனும் எடுக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்ற
வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றிச்சர்ட் ஒட்டாவே தெரிவித்துள்ளார்.கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர்,
“கனேடியப் பிரதமரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கிறோம்.
மனிதஉரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் இல்லையென்றால், மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என்று அவர் கூறுவதற்கு உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம்.
கனேடியப் பிரதமர் ஹாப்பருடன், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இணைந்து கொண்டால், சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து முறையான விசாரணை நடத்துவதற்கு சிறிலங்கா அரசுக்கு உண்மையான அச்சுறுத்தலைக் கொடுக்கக் கூடியதாக இருக்கக் கூடும்.
மனிதஉரிமைகள் நிலையை முன்னேற்றாது போனால் நாம், கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிப்போம் என்று ஹாப்பருடன் இணைந்து கமரூன் குரல் கொடுப்பார் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
எனினும், சிறிலங்கா மனிதஉரிமைகள் நிலையை முன்னேற்றாது போனால் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக பிரித்தானியப் பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு முன்வைத்துள்ள கோரிக்கைக்கு டேவிட் கமரூன் இன்னமும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment