தமிழீழத்
தாயகத்தில் பெரும்அவதிக்கு உள்ளாகிவரும் மாவீரர் குடும்பங்களுக்கான
வாழ்வாதார உதவித்திட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள்,
முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாவீரர் நாளில் இருந்து (27-11-2012)
அடுத்தாண்டு மே-18 தமிழத் தேசிய துக்க நாள் வரைக்குமான இடைப்பட்ட காலத்தில்
குறைந்தது 1000 மாவீரர் குடும்பங்களின் வாழ்நிலையினை மேம்படுத்தும்
நோக்கில் தளிர் எனப் பெயரிடப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக
மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சர் உருத்திரபதி
சேகர் அவர்கள் நா.தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தின் சன்னதி முருகன் அன்னதான
நேரத்தில் பல மாவீரர் குடும்பங்கள் அன்னமேற்று வாழ்கின்றன என்று
கேள்வியுறுகையில் நெஞ்சு வெடிக்கிறது. மாவீரர்களின் செல்வங்கள்
தெருவோரத்தில் கையேந்தி நிற்கின்றனர் என்பதை அறிகையில் நாம் புலத்தில்
வாழும் பெருமித வாழ்வு குறித்த பெருமை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் கரைந்து
விடுகிறது. எனவே மாவீரர் வாரிசுகளை எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற
உணர்வுடன் நாம் அணுகிடுவோம். அதற்காக உங்களை எங்களுடன் இணைய அழைக்கின்றோம்
என அமைச்சர் உருத்திரபதி சேகர் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் குறித்த
மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது அந்தந்த நாட்டு நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள்
ஊடாகவோ இது தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment