மட்டக்களப்பு,
குடும்பிமலையில், அத்துமீறிக் குடியேறி வரும் சிங்களவர்கள், அந்தப் பகுதி
மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்த தமிழர்களைத் தாக்கி
காயப்படுத்தியுள்ளனர்.
குடும்பிமலைப் பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறி
வருகின்றனர். இவ்வாறு அத்துமீறி குடியேறிய சிங்களவர்கள் 17 பேருக்கு
எதிராக, பிரதேசசெயலர் மற்றும் குடியேற்ற அதிகாரி ஆகியோர் இணைந்து
வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 28ம் நாள், அத்துமீறி குடியேறிய சிங்களவர்கள் மூவரை, குடும்பிமலை கிராம அதிகாரி, வனத்துறை அதிகாரி, மற்றும் காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர்.
இவர்கள் வாழைச்சேனை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில், இந்தப் பகுதியில் உள்ள பெரியமாதவனை பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்திய தமிழர்கள், அங்கு வந்த சிங்களக் குடியேற்றவாசிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
மேய்ச்சலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் மாடுகளை அடைத்து விட்டு, தூங்கிக் கொண்டிருந்த, கால்நடை உரிமையாளர்களை உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 15 இற்கு மேற்ப்பட்ட சிங்களவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், சித்தாண்டியை சேர்ந்த இராமலிங்கம் வெள்ளையன் (வயது- 23), மாசிலாமணி எந்திரன் (வயது -25) ஆகியோர் காயமடைந்தனர். நேற்றிரவுக்குப் பின்னர், எவரும் அங்கு மாடுகளைக் கட்டக்கூடாது என்றும், அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment