Tuesday, September 10, 2013

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல: இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் !


தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள். என காணாமல் போயுள்ள விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியும் வடக்கு மாகாண சபையின் யாழ். மாவட்ட வேட்பாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எங்கள் உறவுகளை மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம் மக்கள் முன்னிலையில் இராணுவத்திடம் ஒப்படைத்தோம். இன்று அவர்கள் காணாமல் போயுள்ளார்கள். அவர்கள் எமக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ். வந்திருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இராணுவத்திடம் சரணடைந்தோ ஒப்படைக்கப்பட்டோ காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என கூறியிருந்தார். சரத் பொன்சேகா ஒரு போர் குற்றவாளி. அவர் ஒரு இனப் படுகொலையாளி. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர். அவர் அவ்வாறு கூறியதை நாம் பொருட்படுத்த முடியாது.

ஒரு போர் குற்றவாளியை நாம் யாழ்ப்பாணத்திற்குள் விட்டதே பெரும் தவறு. இறுதி யுத்தத்தின் போது 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் முன்னிலையில் எமது உறவுகளை நாம் இராணுவத்திடம் கையளித்து இருந்தோம் இன்று அவர்கள் காணாமல் போயுள்ளார்கள். நாம் அவர்களை இலங்கை இராணுவத்திடம் தான் கையளித்து இருந்தோம். வேறு நாட்டு இராணுவத்திடம் அல்ல. எமக்கு அவர்கள் அனைவரும் திரும்பி வரவேண்டும். நாம் பொய்யானவர்கள் அல்ல. பொய்யானவர்கள் என்றால் காணாமல் போனவர்களை கண்டறிய கோரி நீதிமன்றத்தை நாடி இருக்க மாட்டோம். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளின் குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதை நான் முற்றாக மறுக்கின்றேன். அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள்.

இன்று நாம் சர்வதேச விசாரணைகள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தும் போது இப்படியான கூற்று எமக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். இந்த கொள்கைக்கு நான் எதிரானவள் என மேலும் தெரிவித்தார்.

source:athirvu 

No comments:

Post a Comment