Thursday, October 17, 2013

வாக்காளராகப் பதியாமல் விட்ட கிராம அலுவலர் மீது முறைப்பாடு; அடிப்படை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகிறது


hrs_001

2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்படாமை அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்து யாழ். வாசிகள் இருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனால் தாம் வடக்கு மாகாண தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்காளர் பெயர்ப்பதிவின் போது கிராம சேவையாளர்களிடம் “பி.சி’ படிவத்தைச் சமர்ப்பித்தும் கடந்த ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இணைக்கப்படாமைக்கு எதிராக இவர்கள் இருவரும் மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ்.  பிராந்தியக்கிளையில் முறையிட்டுள்ளனர்.
இல 770, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, க.சின்னையா சிவரூபன், அவரது மனைவியான சிவரூபன் தக்சி ஆகிய இருவருமே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
“2012ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு நடவடிக்கையின் போது ஜே/74 கிராம சேவையாளரிடம் வாக்காளர் பதிவுக்கான “பி.சி’ படிவத்தைக் கையளித்தோம். அதற்கான ஆதாரமாக “பி.சி’ படிவத்தின் அடித்துண்டு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது வாக்காளர் பெயர்ப் பட்டியலில் அவர்களது பெயர் இருக்கவில்லை. “இதனால் நாம் வாக்களிக்க முடியாது போயுள்ளது. நாம் வாக்காளர்களாக விண்ணப்பித்தும் காரணமின்றி பெயர் நீக்கப்பட்டமை அடிப்படை மனிதஉரிமை மீறல்” என்று குறிப்பிட்டே மனிதஉரிமை ஆணைக்குழுவில் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில், சிறுவர்கள் தவிர 18 வயதும், அதற்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் 20  ஆயிரம் பேர்வரை அவ்வாறு வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்படாமல்  விடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment