நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் தெற்கு மக்களவை தொகுதி காங்கிரஸ்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நந்தன் நீல்கேனி தனக்கு ரூ.7,700 கோடி
சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய
திட்டங்களில் ஒன்றான ஆதார் அடையாள அட்டையின் முக்கிய வடிவமைப்பாளரான
நந்தன் நீல்கேனி, கடந்த 9ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதற்கு
மறு நாள் பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை வேட்பாளராக
அறிவிக்கப்பட்டார். பெங்களூரில் அவர் வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
நான் ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பாக்கெட்டில் 200 ரூபாயுடன் வாழ்க்கையை துவக்கினேன். ரூ.10 ஆயிரம் முதலீட்டுடன் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினோம். இன்று அந்த நிறுவனத்தின் அபார வளர்ச்சியினால் எனக்கும் எனது மனைவி ரோகிணி நீல்கேனிக்கும் ரூ.7,700 கோடிக்கு சொத்து மதிப்பு உள்ளது. பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் எனது சொத்து மதிப்பும் அதிகரித்தது. தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் எனக்கு 1.45 சதவிகித பங்குகளும், எனது மனைவிக்கு 1.3 சதவிகித பங்குகளும் உள்ளன. சொத்து மதிப்புகளை வெளிப்படையாகக் கூறுவதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு நந்தன் நீல்கேனி கூறியுள்ளார்.
நந்தன் நீல்கேனிக்கு எதிராக அத்தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிடும் அனந்தகுமார் நேற்று பெங்களூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவில் தனக்கு ரூ.51.12 லட்சத்துக்கு சொத்தும், தனது மனைவி தேஜஸ்வினிக்கு ரூ.3.86 கோடிக்கு சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment