Wednesday, October 01, 2014

சற்று முன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா பிணைமனு கொடுத்துள்ளார் !

பிணை கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது என அதிர்வு இணையம் சற்று முன் அறிகிறது. பெங்களூரில் உள்ள தமிழ் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்களே அதிர்வு இணையத்திற்கு இத்தகவலை தெரிவித்துள்ளார்கள். இந்த மனு மீது ஜெயலலிதாவுக்காக வாதாடுவதற்கு, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜாராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். டெல்லியில் இருந்து அவர் விசேடமாக கர்நாடகா வந்துள்ளார். இதேவேளை ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனுவை விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது என அறியப்படுகிறது.

விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கால அவகாசம் கேட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்றும், அதுதொடர்பான அறிவிப்பாணை வரும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பவானி சிங் எடுத்துரைத்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டார். கடந்த 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலி தாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே.
கர்நாடகத்தில் தசரா விடுமுறையையொட்டி நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டதால், மிகவும் சிரமப்பட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்தபோது, ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அசோகன், பரணி குமார் ஆகியோர் வந்தனர். கர்நாட கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் மட்டுமே மனுவில் கையெழுத்திட முடியும் என்பதால், பெங்களூ ரைச் சேர்ந்த 4 வழக்கறிஞர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் வேணுகோபால், சசிகலாவுக்கு ஸ்ரீநிவாஸ், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், இளவரசிக்கு அம்ஜத் பாஷா ஆகியோர் கையெழுத்திட்டு சரியாக 12.10 மணிக்கு ஜாமீன் மனு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் நான்கு முக்கிய மனுக்களை தாக்கல் செய்தனர். ஒவ்வொரு மனுவும் சுமார் 1,000 பக்கங்கள் கொண்டது. அதில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரியும், தங்களது சொத்துகளை பறிமுதல் செய்ய விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது தவிர நால்வர் தரப்பிலும் தீர்ப்புக்கும்,தண்டனையை ரத்து செய்யக்கோரியும் தலா இரு இடைக்கால தடை மனுக்களையும் தாக்கல் செய்தனர்.அவர்களுடைய மனுக்கள் உடனே ஏற்கப்பட்டு பதிவெண்கள் (835,836,837,838) வழங்கப்பட்டன.
ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ''எனக்கு 66 வயதாகிறது. ஒரு பெண்ணாக இருப்பதால் சிறை தண்டனை மிகவும் கடினமானது. இது தவிர நீரிழிவு நோய், இதய கோளாறு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரப்பட்டுள்ளது. இதே போல ''பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல. ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி டி'குன்ஹா எனது வழக்கில் வருமான வரி தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பை கருத்தில் கொள்ளவில்லை. நான் வழக்கு காலத்தில் (1991- 96) சேர்த்த சொத்துகள் அனைத்தும் சட்ட விரோதமானவை அல்ல. என் மீது எந்த குற்றமும் கூறப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு, எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்''என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதி டி'குன்ஹாவின் இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு இந்திய அளவில் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிக்க சட்ட நிபுணர்கள் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் அவர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். மொத்தத்தில் 50க்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்கள் ரூம் போட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதன் அடிப்படையில் வைத்து பார்த்தால், 6ம் திகதி அம்மாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment