Wednesday, October 08, 2014

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சிவாஜிலிங்கம் பலத்த பதிலடி !

அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், போராட்ட குழுக்களோடு இணைந்து வேலைசெய்ய முடியாது என்ற கருத்து ஒன்றை வெளியிட்டார். இதனை முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடுமையாக கண்டித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராட்டக் குழுக்கள் அனைத்தும் தீண்டத்தகாதவைகள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,

'எமது தேசிய விடுதலைப் போராளிகளை கொச்சைப்படுத்துபவர்களை தமிழினத் துரோகிகள் என கூறலாம். வடமாகாண சபை தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வரும்படி விக்னேஸ்வரனை, இரா.சம்பந்தன் அழைத்த போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே போட்டியிட வருவேன் என விக்னேஸ்வரன் கூறினார். அப்போது அவருக்கு தெரியவில்லையா நாங்கள் ஆயுதக்குழுக்கள் என்று. அப்போது ஆயுதக்குழுக்களுடன் இணைந்து, பிரபாகரன் மாவீரன் என்று தேர்தல் பிரசாரம் செய்து தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர், போராட்ட அமைப்புக்களுடன் இணைந்திருக்க முடியாது என்கிறார்.
வடமாகாண சபையில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 30 பேரில், 13 பேர் போராட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐச் சேர்ந்த அறுவரும் டெலோவைச் சேர்ந்த ஐவரும் புளொட் அமைப்பைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்தே சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக அங்கீகரித்தனர். நாங்கள் அனைவரும் 27 வருடங்களுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஐனநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டுவிட்டோம். 1969ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போது, அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் அந்த ஆயுதக் குழுக்களுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வந்தனர்.
1981இல் டெலோவை சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட போராளிகள் கைது செய்யப்பட்ட போது, அவர்களுக்காக சிவசிதம்பரம் உள்ளிட்ட தலைவர்க்ள நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டிருந்தனர். 1985ஆம் ஆண்டு திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 போராட்டக் குழுக்கள் கலந்துகொண்டிருந்தன. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பாகவே பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டனர். எமது இந்த போராட்ட இயக்கங்களில் இருந்து 30 ஆயிரம் போராளிகள் தங்கள் இன்னுயிரை நீர்த்தமையால் இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.
எங்கள் ஆதரவுடன் எங்கள் தோள் மீது ஏறி நின்று தீண்டத்தகாதவர்கள் என்று கூற முடியாது. அதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை. முதலமைச்சர் உட்பட எவரையும் இவ்வாறு கதைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment