கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐ. தே. கவின் தவிசாளரும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான காமினி ஜயவிக்ரம பெரேரா இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஆட்கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகளென யாழ். குடாநாட்டில் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஒரு பயங்கரமான அசாதாரணமான சூழ்நிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனவே நிலைமை எந்தளவுக்கு மோசமானதென்பதை நாம் இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
அரசியல்வாதிகளை சார்ந்த குழுக்களே ஆட்கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் அதிகரித்துச் செல்கிறது.
எனவே இச் சம்பவங்களிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க ஏதுவாக அமையும். அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் புலியை மீண்டும் அரசாங்கம் தட்டி எழுப்புவதாக அமைந்து விடும்.
நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இனப்பாகுபாடு இருக்குமானால் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
அன்று எமது கடவுச் சீட்டில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனை ஐ. தே. கவின் ஆட்சியில் இல்லாதொழித்தோம். ஸ்ரீ லங்கன் (இலங்கையர்) எனக் குறிப்பிடப்படுவதை சட்டமாக்கினோம்.
எனவே இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி வடபகுதி சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கா விட்டால் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அத்தோடு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும். என்றார். |
No comments:
Post a Comment