ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அரசு மறுத்துள்ளபோதிலும் அந்த அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் அளித்துவிட்டது என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: "ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும், சனல் 4 விடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்க அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்த அரசு முயற்சி எடுக்கவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பும் "சனல்4'இல் விடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொன்னது. ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டுக்கு ஏற்படும் ஆபத்துகளை அவப்பெயர்களைத் தடுப்பது அரசின் கடமை. இது தொடர்பாக ஊடகங்களுடனேயோ, நாட்டு மக்களுடனேயோ அல்லது நாடாளுமன்றத்திலோ பேசுவதில் எதுவித பயனும் இல்லை. சர்வதேசத்துடன்தான் பேசவேண்டும்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால், அந்த அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டிருக்கும் 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் வழங்கிவிட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்று அரசு கூறுகிறது. இதை எவரும் நம்பமாட்டார்கள். இதை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூற வேண்டும்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பொய்யாக்குவது அரசின் கைகளில்தான் தங்கியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கவில்லை என்று அரச தரப்பு ஊடகங்களே கூறுகின்றன. ஆகவே, அரசு உடனடியாக சர்வதேசத்துடன் பேச்சு நடத்தவேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறக்க விட்டு இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்க அரசு அனுமதி வழங்கவேண்டும். "
முகப்பு
No comments:
Post a Comment