பொங்கு தமிழ் உலகத்தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமது குரலை வெளிப்படுத்தும் ஒர் அரங்கு. பல்வேறு சுதந்திரங்கள் உறுதி செய்யப்பட்ட மேற்குநாடுகளில் வெளிவரும் ஒரு குரல்.
தமிழர்கள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு அரங்காகவும் இதைக் கருதலாம்.



60 வது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசு மேற்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமான இனச்சுத்திகரிப்பின் உச்சக் கட்டமாக 2009 ஆண்டு மே மாதம் நிறைவு பெற்று இன்றுவரை படுமோசமாக விலையற்ற உயிரச் சொத்தாக சொல்லப்படும் தமிழர் தம் காணியை பறிமுதல் செய்து அதன் ஊடாக அரங்கேறும் ஈழத்தமிழர் வரலாற்றின் பாரம்பரிய தாயக பூமியின்- இனத்தின்  சிதைப்பு உலகத்தில் எங்கும் நடைபெறாத கொடூரமாக அமைகின்றது.

தாயகமக்களின் குரல் எதிரிகளால் அடைக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் உலகம் முழுதும் சிதறி வாழும் புலம்பெயர் தமிழ்மக்கள் ஆகிய நாம் எம் உறவுகளை விடிவிக்கும் தார்மீகக் கடமையில் இருக்கின்றோம். முள்ளிவாய்க்கால் சுதந்திரம் வேண்டிப் போராடிய தமிழர்களின்   சமாதி என்று கங்கணம் கட்டிய சிங்கள இனவெறி அரசுக்கு,  முள்ளிவைக்கால் முடிவல்ல என்று உறுதியோடு சவால் விட்டனர்   புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் .

அவ்வகையில் சிங்கள இனவெறியனின் இலக்கு புலம்பெயர் மக்களை நோக்கிப் பாய்ந்தது. பாய்ந்து கொண்டிருகின்றது. நாளுக்கு நாள் குழப்பகரமான செய்திகள் முகம் தெரியாதவர்களால் மின்னஞ்சல்  ஊடாக அனுப்பப்படுகின்றது . பல்வேறு வழிகளிலும் புலம்பெயர் மக்கள் குறிவைக்கப்பட்டு அவர்களை உளவியல் ரீதியாக சிங்கள அரசின் உளவு நடவடிக்கையில் அவர்களுக்கு தெரியாமலே சிக்க வைக்க முயற்சிகள் வேகமாக நடைபெறுகின்றது. தமிழர்களின் இலட்சியத்தை முறியடிக்க புலம்பெயர் நாடுகளிலும் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை ஏற்படுத்த எதிரி  முயல்கின்றான்.

எத்தனை சவால்கள் வந்தாலும் தேசிய இலட்சியத்தை  தலை மேல் தாங்கி இன்றுவரை தொடர்கின்றது எம் விடுதலைப் பயணம். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெனீவாவில் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற மாபெரும்  'பொங்கு தமிழ்'   மக்கள் எழுச்சி நிகழ்வு.

அன்று தாயகத்தில் எதிரியின் பிடியின் நடுவில் நின்று உயிருக்கு அஞ்சாமல் மாணவர்கள்  மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொங்குதமிழ் என்னும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு தை மாதம் 17 ஆம் திகதி மாபெரும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்து கொண்ட இராணுவத்தினரால் அந்நிகழ்வைத் தடுப்பதற்கு முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முன்நின்ற மாணவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இராணுவத்தினரால் எச்சரிக்கப்பட்டனர். உச்சக்கட்டமாக நடைபெறவிருந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றியும் கண்டனர். ஆனாலும் மாணவர் எழுச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் செல்லமுடியாது தடுக்கப்படுவர் என்று முற்கூட்டியே அறிந்து கொண்டதால் பல்வேறு மாணவர் பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் மாணவர் தங்கு விடுதியில் முதல் நாளே தங்கிவிட்டிருந்தனர். கூடவே இராணுவத்துக்குப் போக்குக் காட்டிவிட்டு வந்த பாடசாலை மாணவர்களும் சேர்ந்து உணர்வுபூர்வமாய் தமிழர் குரல் பொங்குதமிழாய் ஒலித்தது.
அன்றைய நாள் யாழ் நகரெங்கும் மிகுந்த பதட்டமாகவே இருந்தது. பல்கலைக்கழக வட்டாரம் இராணுவத்தால் சூழப்பட்டிருந்தது. உயரமான மரங்களிலும், கட்டடங்களிலும் ஏறி இருந்த இராணுவத்தினர் நிகழ்வில் பங்குபற்றிய ஒவ்வொருத்தர் முகத்தையும் ஒளிநாடாவில் பதிவு செய்தனர். பின்வரும் நாட்களில் அவர்கள் இராணுவத்தால் தாக்கப்படுவர் என்பதற்கான எச்சரிக்கையே அது.

ஆனாலும் மரபுவழித்தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்ற குரலை ஓங்கி ஒலித்த மாணவர் எழுச்சியை இராணுவ பலத்தால்  நசுக்கமுடியாமல் போனது. தொடர்ந்து வந்த நாட்களில் வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், மலையகம் போன்ற தமிழர் வாழும் பிரதேசங்களெங்கும் பொங்குதமிழ்ப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. முற்றிலும் மாணவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டமானது உலகின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.

உலகமெங்கும் வாழும் தமிழ் மாணவர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் பொங்குதமிழ் எழுச்சியைக் கொண்டாடினார்கள். ஆதரவுக் கூட்டங்களையும், எழுச்சி ஊர்வலங்களையும் நடத்தினார்கள்.
அதே போல் இன்று எதிர்வரும் 29 நாள் கனடாவில் மாபெரும் ' பொங்கு தமிழ் ' நிகழ்வு நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றது . மாவீரர்களின் இலட்சியம் நிறைவேற நாம் அவர்களை வணங்குவது மட்டும் அல்ல. அத்தூய மறவர்களின் இலட்சியத்தை அடைய நாம் அனைவரும் அயராது அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அரசில் வேலைத்திட்டங்களுக்கு  பலம் சேர்க்கும் இப்படியான நீதி கேட்கும் மக்கள் எழுச்சி நிகழ்வுகள் காலத்தின் கட்டாயம்.

அதை உணர்ந்து கனடா உறவுகள் நிச்சயமாக இந்த மாபெரும் பொங்கு தமிழ் எழுச;சி நிகழ்வில் தவறாது கலந்து கொள்வீர்கள் என உறுதியோடு நம்புகிறோம் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாகம்

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.

http://www.eeladhesam.com/images/eeladhesam/theesiya-vilamparam/pongutamil.jpg