Monday, March 19, 2012

இன்றைய தேவை அனைத்துலக விசாரணை மட்டுமேயாகும் – நா.க.த.அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்


uruthiraசிறிலங்காவின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்ற சனல்-4 தொலைக்காட்சியின்  ஆவணப்படம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான எமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகள் காலத்தின் தேவையை உணர்ந்து தற்பொழுது முன்வைக்கப் பட்டுள்ள முன்மொழிவுயில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் சுதந்திரமான
அனைத்துலக விசாரணையின் தேவையை வற்புறுத்துமாறு அறைகூவல் விடுகின்றோம் எனவும் இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையிலும் இன்றைய தேவை அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையின் முழுவிபரம்:
பிரித்தானிய நாட்டின் ‘சனல் 4′ தொலைக் காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ எனும் ஆவணப்படத் தொடரினை நாம் அனைவரும் ஆழ்ந்த துயரத்துடனும் கோபத்துடனுமேயே பார்வையிட்டோம்..
நான்கு சம்பவங்களை மட்டும் குறிப்பாகக் காட்டும் இந்தக் காணொலியில் காட்டப்படுபவை யாவும் போரின் இறுதிக் கட்டங்களில் சிறிலங்கா இழைத்துள்ள போர்க்குற்றங்களில் ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். இவ் ஆவணப்படத்தினைவிட பிற ஆதாரங்களையும் நாம் இந்த வேளையில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப் பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அடிகள் அவர்களின் அறிக்கை என்பனவும், அண்மைக் காலங்களில் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி வந்தவர்கள் கொடுத்துள்ள வாக்கு மூலங்கள் என்பனவும் இதனுடன் கவனத்தில் கொள்ளப் படல் வேண்டும்.
மன்னார் ஆயர் அவர்கள் தனது வாக்கு மூலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த 146,679 மக்களுக்கு நடந்த கதி என்னவென்று தெரியாத நிலை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளதும் ஒரு முக்கியமான விடயமாகும். இவை யாவும் போரின் போது நிகழ்ந்த கொடுமைகளையும் குற்றங்களையும் உணர்த்தி நிற்கின்றன.
சிறிலங்காவின் இராணுவ அரசியல் தலைமைப்பீடம் முன்வைத்து வரும் கொடூரமும் கபடமும் மிக்க ஏமாற்றுக் கருத்துக்களும் கேவலமான முயற்சிகளும் மானுடத்தை வெட்கப்படுத்துவன. அதன் மதிகூர்மையை அவமதிப்பன. இரு ஐநா அதிகாரிகள் கொடுத்ததையொத்த நேரடி சாட்சியங்கள் மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்த தமிழ்மக்கள் மீது குறிவைத்து நடாத்தப் பட்ட தாக்குதல்கள் பற்றி சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டளை அதிகார மட்டம் நன்கறிந்திருந்தது என்பது மிகத் தெளிவாக நிறுவப் பட்டுள்ளது.
சிறிலங்காவின் மிக உயர்ந்த அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் இவ்வகையான போர்க்குற்றங்களில் நன்கு தெரிந்து கொண்டுதான் ஈடுபட்டார்களென்பது இப் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணை வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் கோரிக்கையை மேலும் வலியுறுத்தி நிற்கின்றது. இதனையே ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கோடிட்டுக்  காட்டியுள்ளது.
சனல் 4 ஆவணப்படம் பல்வேறு விடயங்கள் உள்ளடங்கலாக பின்வருவனவற்றை வலியுறுத்தி நிற்கின்றது:
1) திட்டமிட்ட முறையில் நிகழ்ந்துள்ள கொலைகள், சிறிலங்கா அரச இராணுவ அதிகார பீடத்தின் அதி உயர் மட்டத்தில் உள்ளவர்களது ஈடுபாட்டினைச் சுட்டி நிற்கின்றன.
2) செல் தாக்குதல்கள் பற்றி சிறிலங்காவின பாதுகாப்பு அமைச்சரும் இராணுவத் தளபதியும் நேரடியாக அறிந்திருந்தார்கள் [பேராசிரியர் வில்லியம் சாப்ஸின் பகுப்பாய்வின்படி இவர்கள் குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப் படவேண்டியவர்களாவர்].
3) யுத்த சூனியப் பிரதேசங்கள் மீது நடாத்தப் பட்ட செல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா அரசின் அதிஉயர் மட்டத் தலைவர்கள் அனுமதி வழங்கியிருந்தார்கள்.
4) கைப்பற்றப் பட்ட மற்றும் சரணடைந்தவர்கள் ஆடைகள் களையப்பட்ட பின் கொலைசெய்யப்பட வேண்டும் எனும் கொள்கைக்கு கட்டளை அதிகாரிகள் நேரடிப் பொறுப்பானவர்களாக இருந்துள்ளார்கள்.
5) சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக மறுத்து வந்துள்ள போதிலும் யுத்த வெற்றியை இராணுவம் கொண்டாடும் காட்சியில் அவர்கள் கனரக ஆயுதங்களை இயக்கியது உண்மையாக்கப்பட்டுள்ளது.
6) பரந்த அளவிலான பாலியல் வன்செயல்களும், கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உடலங்கள் மனிதாபிமானம் அற்ற முறையில் சிதைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும், இவை அங்கொன்று இங்கொன்றாக நிகழ்ந்தவை அல்ல எனவும், எதிரியாகக் கருதப்பட்டவர்கள் சிதைத்து அழிக்கப்பட வேண்டுமென்ற கொள்கை தீர்க்கமான வகையில் திட்டமிடப்பட்டதென்பதும் நிறுவப்பட்டுள்ளது.
ஐநா சபை வன்னி மக்கள்தொகை தொடர்பாக வெளியிட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் போர்ப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த மக்களின் தொகையை மிகவும் குறைத்துக் காட்டியதோடு, அப்பகுதி மக்களுக்கு உணவு மருந்துப் பொருட்களை திட்டவட்டமாக மறுத்திருந்தது என்பது இவ் விவரணப் படத்தின் மூலம் மிகத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இவ்வகை நடவடிக்கைகள் யாவும் சிறிலங்கா அரசின் அதிஉயர் மட்டத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டன என்பதையும் ஆவணப்படம் வலியுறுத்துகின்றது.
இவ்வாறு திட்டமிட்ட முறையில், அடிப்படைத் தேவைகளான  உணவு மருந்துப் பொருட்களை மறுக்கும் செயலானது 1948 ஐநாவின்  இனஅழிப்பு பற்றிய பிரகடனத்தின் விதி 2 [உ] யின் கீழ் அடங்குகிறது. அதாவது, “ஒரு குழுமத்தை முற்றாகவோ அதன் ஒரு பகுதியையோ வேண்டுமென்றே அழிக்கும் நோக்குடன் இயங்குவது இன அழிப்பாகும்” என இந்த விதி கூறுகின்றது. இது தொடர்பாக ருவாண்டா நாட்டுக்கான அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் வெளியிட்ட கருத்தான “ஒரு குற்றத்தின் உள் நோக்கமும் அதன் தன்மையும், அக்குற்றம் இழைக்கப்பட்ட பொதுச் சூழலைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படலாம்” என்பது இங்குநோக்கற்பாலது.
எனவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடுயாதெனில், இடம்பெறவிருக்கும் அனைத்துலக விசாரணையானது போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுடன் மட்டும் நின்று விடாது இன அழிப்பையும் உள்ளடக்க வேண்டும் என்பதேயாகும்.
சிறிலங்கா தீவில் இயங்கி வரும் அரசியல் இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு இக் காட்டுமிராண்டித் தனமான  குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே இக் கொடுமைகள்  நிகழ்ந்துள்ளன என்பதை இக் காணொலி மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.
எனவே, இந்தக் குற்றகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தவர்களும், அதில் ஈடுபட்டவர்களும் இக் குற்றங்களை விசாரணை செய்து அதற்குரிய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவார்கள் எனக் கருதுவது மிகவும் போலியானதோர் அணுகு முறை என்பதே எமது நிலைப்பாடாகும். இவ் ஆவணப்படமும் இதே கருத்தையே முன் வைக்கின்றது.
அதாவது,  எந்த ஒரு இராணுவத் தலைப்பீடம் இத்தகைய குற்றங்களை அனுமதித்தும் அதில் ஈடுபட்டும் வந்ததோ, அதே இராணுவத் தலைமைப் பீடத்தால் இப்பொழுது நியமிக்கப் பட்டுள்ள இராணுவ நீதி மன்றம் உண்மையை வெளிக் கொண்டு வந்து, நீதியை நிலைநாட்டும் என்பதும் தவறானதென ஆவணப்படம் கூறுகின்றது.
அத்துடன், போரின் இறுதிக் கட்டங்களில் நிகழ்ந்தவை பற்றிய ‘படிப்பினைக்கும் நல்லிணக்கதுக்குமான ஆணைக் குழுவின்’ கண்டுபிடிப்புக்கள் விடயங்களை மூடி மறைப்பதற்கானதொரு நாடகமே எனவும் ஆவணப்படம் கூறுகின்றது.
ஏற்கெனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டது போல போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்ததாக ‘படிப்பினைக்கும் நல்லினக்கதுக்குமான ஆணைக் குழு’வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை ஏற்றுக் கொண்டால், சிறிலங்கா அரச இராணுவத் தலைமைப் பீடங்கள் தாம் இழைத்த குற்றங்களிலிருந்து, அதாவது ஐநா நிபுணர்; குழுவினாலும் ‘சனல் 4′ காணொலி மூலமும் முன் வைக்கப் பட்டுள்ள பாரிய குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அது வழி சமைத்து விடும்.
இவ்விடத்தில் இன்னும் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய மிக முக்கிய தன்மை யாதெனில், இக் குற்றங்களை விசாரணை செய்வதற்கான  அரசியல் மனோபலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் இல்லை என்பதே யதார்த்தமாகும்.
கென்யா நாட்டில் நடந்தது போல, உள்நாட்டில் இத்தகைய குற்றங்கள் விசாரணைக்குட் படுத்தக்கூடிய அரசியல் மனோபலம் அற்ற நிலையில் உள்நாட்டு வழிமுறைகளுக்காகக் காத்திருக்காமல் அரசியல் தலைவர்களை அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றில் விசாரணைக்கு  உட்படுத்துவதே இங்கும் பொருந்தும்.
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்  திரு. டேவிட் மில்லிபான்ட் அவர்கள் ‘சிறிலங்காவின் தலைவர்கள் பொய் உரைப்பவர்கள்’ எனத் தயக்கமெதுவுமின்றி  ராஜதந்திர மரபுகளை மீறிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளது இவ்விடத்தில் நோக்கத் தக்கது.
‘சனல் 4′ ஆவணப்படம் முடிவில் கூறியுள்ளதுபோன்று தமிழ்ப் பொதுமக்களுக்கான நீதி கேள்விக்குள்ளாக்கப் படுவது மட்டுமன்றி, ஐநாவின் நற்பெயரும் ஏற்புடைமையும் இவ்விடத்தில்   கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டியதாகும். எனவே ஐநா மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகள் காலத்தின் தேவையை உணர்ந்து தற்பொழுது முன்வைக்கப் பட்டுள்ள முன்மொழிவுயில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் தேவையை வற்புறுத்துமாறு அறைகூவல் விடுகின்றோம். இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையிலும் இன்றைய தேவை அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Posted by Nilavan on March 18th, 2012

No comments:

Post a Comment