Monday, March 19, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரவு?

தமிழக அரசியல் கட்சிகளின் தீவிர நெருக்கடிக்குப் பணிந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  indiaflagbigமத்திய அரசு தனது நிலையை நாடாளுமன்றத்தில், வரும் வாரம் தெளிவுபடுத்தும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
இந்தப் பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கி வருவதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்ற நிலையை தமிழக மக்களின் உணர்வாக உள்துறை அமைச்சர் பிரதிபலித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
சில திருத்தங்களுடன் ஆதரவு?: இதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலை, அந்தத் தீர்மானத்தில் சில திருத்தங்களைச் செய்து ஆதரவு அளிப்பது போன்ற முயற்சிகளைத் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்துக் கொண்டு வலம் வரும் இலங்கையின் போக்கு இந்தியாவுக்கு அதிருப்தியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இந்தியாவின், வலிய வந்து செய்யும் உதவிகளுக்கு உரிய மரியாதையும் மதிப்பையும் இலங்கை கொடுப்பதில்லை என்ற தகவலும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
இலங்கைக்கு எச்சரிக்கை சமிக்ஞை: இந்நிலையில், இலங்கைக்கு எதிரான திருத்தப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு ஒரு “எச்சரிக்கை சமிக்ஞை’ அனுப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
“இந்தத் தருணத்தில், இலங்கைக்கு எதிரான கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும். அது, ராஜீய ரீதியாக இந்தியாவின் செல்வாக்கைச் சர்வதேச சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள உதவுவதுடன், உள்நாட்டில் சரிந்து வரும் தமது செல்வாக்கையும் சரி செய்து கொள்ள உதவும்’ என்ற சிதம்பரத்தின் வாதத்தை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி ஆகிய மூத்த அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒருபுறம், ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்திய விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நெருக்கடி கொடுத்து வருகிறார்.
மறுபுறம், இலங்கை விவகாரத்தில் அந்நாட்டுக்கு அனுசரணையான நிலையை இந்தியா கடைப்பிடித்தால், அது உள்நாட்டு அரசியலில் மேலும் நெருக்கடியைத் தரும் என்றும் சிதம்பரம் விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்னேற்றங்களின் பலனாக, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தில் சில திருத்தங்களுடன் இந்தியா ஆதரவு அளிக்க களம் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 23-ல் வாக்கெடுப்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு சண்டையின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்த தமிழர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் மீது இலங்கை ராணுவத்தினர் பலவிதமான அடக்குமுறை, மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து சித்ரவதை செய்தனர்.
போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. அத்தீர்மானத்தின் நகல் 47 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் திருத்தம் தேவைப்பட்டால் அவை மேற்கொள்ளப்பட்டு மார்ச் 22ம் தேதி தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும். மார்ச் 23ம் தேதி தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க., இடது சாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைக் கட்சி ஆகியவை குரல் கொடுத்துள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.Posted by Nilavan on March 18th, 2012

No comments:

Post a Comment