Sunday, April 29, 2012

அமெரிக்கப் பெண்களிடம் சிக்கப்போகும் பீரிஸ் குழு


வரும் மே 18ம் நாள் அமெரிக்க இராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினர் ஒபாமா நிர்வாகத்தின் முக்கியமான பல அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, நாமல் ராஜபக்ச, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.

இவர்கள் வொசிங்டனில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள – சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருமே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான மூத்த பெண் இராஜதந்திரிகளாவர்.

அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சுசன் ரைஸ், இராஜாங்கத் திணைக்களத்தின் மனிதஉரிமைகள் மற்றும் பலதரப்பு விவகாரப் பணியகத்துக்குப் பொறுப்பான சமந்தா பவர், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஒரேரோ ஆகியோரை இவர்கள் சந்திக்கவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பெண் இராஜதந்திரிகளாக இருந்தபோதும், விடாப்பிடியான போக்கைக் காட்டுபவர்கள்.

குறிப்பாக மனிதஉரிமை விவகாரங்களில் கூடுதல் அழுத்தங்களைக் கொடுத்து வருபவர்கள்.

அதிலும் சிறிலங்கா விவகாரத்தில் அவ்வப்போது கண்டிப்பாக கருத்துகளை வெளியிடுபவர்களாவர்.

இதனால் பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினருக்கு நெருக்கடி அதிகம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை எல்லா மொழி பேசும் மக்களும் அறியும் வகையில், அதனை தமிழ் மற்றும் சிங்களத்திலும் மொழியாக்கம் செய்யுமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அமெரிக்கா ஆலோசனை கூறியிருந்தது.

ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதில் ஆர்வம் காட்டவில்லை.

பரிந்துரைகளை மொழியாக்கம் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் வொசிங்டன் சந்திப்புகளின் போது சிறிலங்கா குழுவிடம் கேள்வி எழுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.source:puthinappalakai.org
 

No comments:

Post a Comment