Friday, April 27, 2012

விடுதலைப்புலிகளுக்கெதிரான போரில் இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி, ஏப். 26 -
 
விடுதலைப்புலிகளுக்கெதிரான போரில் இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்புகிளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்துக் குண்டுகள் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தடைகளையும் மீறி இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளுக்கு ஏதிரான போரின் போது, இந்த கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியது.
 
போர் நடைபெறும் போதே இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இலங்கை ராணுவம் மறுத்தது.
 
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர், புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு கொத்துக் குண்டைக் கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
புதுக்குடியிருப்பு பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வெடிக்காத நிலையில் கொத்து குண்டு ஒன்றை தான் கண்டுபிடித்ததாக அந்த ஐ.நா.பணியாளர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரின் போது அப்பாவி ஈழ்த்தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பகுதிமேல் இலங்கை விமானப்படை இந்த கொத்துக் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது.
 
இந்த வகை குண்டை தற்போது ஐ.நா பணியாளர் கண்டுபிடித்திருப்பதன் மூலம் இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் இலங்கை அரசை மேலும் கலங்க வைத்துள்ளது.
 
போர்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று பல்வேறு உலகநாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இலங்கை அரசோ இலங்கையில் போர் குற்றம் எதுவும் நிகழவில்லை என மறுப்பு தெரிவித்துவரும் நிலையில் ஐ.நா பணியாளரின் இந்த கொத்துக்குண்டு கண்டுபிடிப்பு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. 
source:MAALAI MALAR

No comments:

Post a Comment