Thursday, June 28, 2012

மஹிந்த ராஜபக்சவுக்கும் டேவிட் கமரூனுக்குமிடையிலான சந்திப்பின் உண்மைநிலை வெளிச்சத்திற்கு

! இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் முன்னேற்றம் காணுமாறும் போர் குற்றச்சாட்டு விடயம் தொடர்பில் நம்பகமானதும், முழுமையானதும் மற்றும் சுதந்திரமானதுமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கையை தொடர்ந்து பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.
கடந்த 6 ஆம் திகதி பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு
அலுவலகம், மகாராணியின் வைர விழா வைபவத்திற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டன் வந்திருந்தபோது, அவரை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான தனது பங்கினை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவிதமான அழுத்தத்தை பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோது பிரயோகித்ததாகவும் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கும் டேவிட் கமரூனுக்குமிடையிலான சந்திப்பு குறித்து ராஜபக்ஸவின் பேச்சாளர் கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலுக்கு முற்றிலும் முரணான வகையில், பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் டேவிட் கமரூனுக்குமிடையிலான சந்திப்பு மிகவும் சுமுகமானதாக இருந்ததாகவும் இதன் போது இலங்கையின் அபிவிருத்தி குறித்து ராஜபக்ஸ கமரூனுக்கு எடுத்துரைத்ததாகவும் ராஜபக்ஸவின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். மஹிந்த ராஜபக்சவின் பிரிட்டன் வருகையை ஆட்சேபித்து பிரித்தானிய தமிழர் பேரவை, பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு அலுவலகத்திற்கு 18 மே,2012 அன்று எழுதிய கடிதத்திற்கு எழுதியுள்ள பதில் கடிதத்திலேயே இந்த உண்மை விபரங்களை வெளியிட்டுள்ளது.
"எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நடைபெற இருக்கும் உலகளாவிய ஆவர்த்தன மதிப்பீடு (UPR) உள்ளடங்கலாக, நாம் எமது சர்வேதேச பங்காளிகளுடன் முன்கூட்டிய முன்னேற்றம் காணுமாறு இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ள பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு அலுவலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் செயற்படுவது தொடர்பிலான அனுமதி குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ள அதேவளை, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது தொடர்பில் முன்னேற்றம் காணுமாறும் இலங்கையை வலியுறுத்தி இருக்கிறது.
வருட இறுதி அளவில் முனேற்றத்தினை எதிர்பார்ப்பதாகவும் இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதற்கு கிடைக்கும் சகல வழிமுறைகளையும் கருத்தில் கொள்ளப்போவதாகவும் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டமைச்சு எச்சரித்துள்ளது. இலங்கையில் அரசியல் தீர்வின் அவசியம் குறித்து கடிதத்தில் வலியுறுத்தி இருக்கின்ற பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு அலுவலகம், "ஒரு பரந்தளவிலான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே நல்லிணக்கமும், நிலையான சமாதானமும் இலங்கையில் சிறந்த முறையில் ஏற்ப்படுத்த முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.
கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

மகாராணியின் வைர விழா வைபவ கொண்டாட்டங்களுக்காக பொதுநலவாய நாடுகளின் சகல தலைவர்களும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்தினால், அழைக்கப்பட்டிருந்தார்கள். இதில் மஹிந்த ராஜபக்ஸவும் உள்ளடங்குவார். இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு கவலைகள் இருக்கின்றன. மனித உரிமைகள் செயற்திட்டங்களுக்கு நிதி உதவி அளித்தல், சர்வதேச பங்காளிகளுடன் பணியாற்றுதல் மற்றும் நேரடியான பரப்புரை ஆகியவற்றினூடாக இவற்றை மேம்படுத்த நாம் முனைகிறோம்.
யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பில் நம்பகமானதும், முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணை ஒன்றை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாதிப்புக்குள்ளான மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் முன்னேற்றத்தை காணுமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் வற்புறுத்துவதோடு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
வடக்கு மற்றும் கிழக்கின் நிலைமைகளை தொடர்ந்து அவதானித்து வருவதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளுக்கான அனுமதி குறித்து கவலைகளை வெளிப்படுத்துகிறோம். அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது தொடர்பில் முன்னேற்றம் காணுமாறும் கோருகிறோம். கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் வலியுறுத்தி இருந்ததுடன் அதனை வரவேற்றும் இருந்தோம். அத்துடன் இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான தனது பங்கினை இலங்கை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தோம்.
ஜூன் 6 ஆம் திகதி பொதுநலவாய செயலாளர் நாயகம் அளித்த மதிய விருந்துபசாரத்தின் போது , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த குறுகிய நேர வேளையில், பிரதமர் மந்திரி டேவிட் காமரோன் இதனை வலியுறுத்தினார். அன்றைய தினம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரிடம் பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சரும் இதனையே வலியுறுத்தினார். எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நடைபெற இருக்கும் உலகளாவிய ஆவர்த்தன மதிப்பீடு (UPR) உள்ளடங்கலாக, மனித உரிமைகளில் முன்கூட்டிய முன்னேற்றம் காணுமாறு நாம் எமது சர்வேதேச பங்காளிகளுடன் இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.
சனல் 4 தொலைக்காட்சியின் "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற ஆவணப்படம் 14 ஜூன் 2012 அன்று ஒளிபரப்பப்பட்ட பின்னர், போர் குற்றச்சாட்டு தொடர்பிலான ஆதாரங்கள் தொடர்பில் நேர்மையானதும், முழுமையானதுமான பதிலை பிரிட்டிஷ் அரசாங்கம் காண வேண்டியிருக்கிறது என்று வெளிநாட்டு அலுவலக அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் ஒரு பகிரங்க அறிக்கையில் தெரிவித்திருந்தார். வருட இறுதி அளவில் முன்னேற்றத்தினை நாம் எதிர்பார்ப்பதுடன் இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்க்காக இருக்கின்ற சகல வழிமுறைகளையும் கவனத்தில் கொள்வோம்.
இலங்கையின் சகல சமூகங்களினதும் அபிலாசைகள் மற்றும் நியாயபூர்வமான துயரங்களை கவனத்தில் கொள்ளுகின்றதும் முரண்பாட்டின் அடிப்படை காரணிகளை நிவர்த்தி செய்கின்றதுமான ஒரு பரந்தளவிலான அரசியல் தீர்வின் மூலமே இலங்கையில் நல்லிணக்கமும் நிலையான சமாதானமும் சிறந்த முறையில் அடையப்பட முடியும் என்று பிரித்தானிய அரசாங்கம் நம்புகிறது.

No comments:

Post a Comment