Thursday, June 21, 2012

சர்வதேச நாடுகளுடன் முதல்முறையாக தமிழீழ அணி பங்கேற்கிறது!

வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டி 2012 யூன் 4ஆம் நாள் எர்பிலில் ஆரம்பமாகியது. அதில் கலந்துகொள்வதற்காக உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் முயற்சியால் தமிழீழம் சார்பாக போட்டியிட தமிழீழ அணி உருவாக்கப்பட்டது. FIFA சுற்றுக்கிண்ணப் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்காகவும் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்காகவும் இந்த வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இவ்வாறான ஒரு சர்வதேசப் போட்டியில் உலக வரலாற்றில் முதன்முறையாக தமிழீழ அணி பங்கேற்கிறது.
 
இவ்வணியில் கனடா, சுவிஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளைச் சேர்ந்த திறமை மிக்க தமிழீழ காற்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகின்றனர். யூன் 3ஆம் நாள் இவ்வணி எர்பில், குருதிஸ்தானில் கால் பதித்தது.

தமிழீழ அணி:
யூன் 4 ஆம் நாள் வீவா சுற்றுக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் போட்டியில் கலந்துகொள்ளும் 9 அணிகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதங்கள் இசைக்கபட்டன. மற்றைய நாடுகளின் கொடிகளுடன் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது; தமிழீழத் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  எர்பிலில் பட்டொளி வீசி பறந்த தமிழீழத் தேசியக் கொடி எமக்கான அங்கீகாரத்தை முன்னுறுத்தி நிற்பதை இந்த போட்டியில் கலந்துகொண்ட வீரர்களின் கண்களில் காணக் கூடியதாக இருந்தது.
தொடக்க நிகழ்வு:
தமிழீழ அணியின் முதலாவது போட்டி ரேசியா அணிக்கு எதிராக யூன் 5 ஆம் நாள் நடைபெற்றது. மிகவும் சிறப்பாக விளையாடி தாய்மண்ணுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள் தமிழீழ அணியில் கலந்துகொண்ட விளையாட்டுவீரர். தமிழீழ அணி இறுதி வரை ரேசியா அணியுடன் கடுமையாக போட்டியிட்டது. விளையாட்டு நிறைவுபெறுவதற்கு ஐந்து மணித்துளிகள் இருக்கும் நிலையில் ரேசியா அணி ஒரு கோல் அடித்து வெற்றியை தமதாக்கி கொண்டது.
முதன்முறையாக ஒரு சர்வதேச போட்டியில் களமிறங்கிய தமிழீழ அணிக்கு உலகம் எங்கும் வாழும் தமிழீழ மக்கள் அளித்து வரும் ஆதரவு பேஸ்பூக், ருவிட்டர் ஆகிய இணையத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாதரவே தமிழீழ அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.

No comments:

Post a Comment