Wednesday, July 04, 2012

சிறிலங்காவின் இராணுவ – பௌத்த – சிங்கள மயமாக்கலுக்குள் மன்னார் !

மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராஜப்பு ஜோசப்பு ஆண்டகையினை மையப்படுத்தி இனவாத கருத்துக்களை  சிங்கள அரச மையங்கள் கக்கிவருகின்றமை ஒருபுறமிருக்க, மறுபுறம் மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பினை பலவீனப்படுத்தும் வகையில் இராணுவ – பௌத்த – சிங்கள மயமாக்கலினை சிங்கள பேரினவாத அரசு வேகப்படுத்தி வருகின்றது.

தமிழ் பேசும் இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் காலங்கலமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் சிறுபெரு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதோடு, அரச ஆதரவு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தன்னுடைய அரசியல் இருப்புக்காக முஸ்லிம் மக்களை வற்புறுத்தி அப்பகுதிகளில் குடியமர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் சௌத்பார் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் காணியினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அங்கு இராணுமுகமொன்றினை அமைத்து வருகின்றனர்.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள சுமார் 600 ஏக்கர் காணியை அபகரிக்கும் முயற்ச்சியில் சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கட்டுக்காரன் குடியிருப்பு கிராமாத்தில் சுமார் 600 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றது.அவை மன்னார் ஆயரில்லத்திற்கும் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம மக்களுக்கும் சொந்தமானதாக காணப்படுகின்றது.
குஞ்சுக்குளம் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் சிறிலங்கா கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதுடன் இதற்கான அறிவிப்புப் பலகையையும் நட்டுள்ளனர்.
இதேவேளை குஞ்சுக்குளம் தொங்கு பாலத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ள காடுகளை அண்டிய பெரியதொரு நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் உட்பிரவேசிக்க இயலாதவாறு வேலியிடப்பட்டு அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
மாந்தை மேற்குப் பெருமளவு நிலத்தை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்விடங்களைக் கடற்படையினர் பறித்தெடுத்துள்ளனர்.
அபகரிப்புக்கு உள்ளான பல இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்ற சிங்களக்கிராமங்களை
உருவாக்கும் முயற்சியில் சிறிலங்கா அரச படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நில அபகரிப்புக்கள் ஒருபுறமெனில் தமிழர்களின் வளங்களை சூறையாடுவதும் தொடர்கதையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய கிராமங்களில் உள்ள பல ஏக்கர் கணக்காண காணிகளில் உள்ள பணை மரங்கள், சிறிலங்கா அரச இயந்திரத்தின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்ன.
குறித்த பனை வளங்களைக் கொண்டு மட்டை வியாபாரம், பனங்கள்  , பனங்கிழங்கு, ஒடியல், பினாட்டு, வினாகிரி போன்றவற்றின் ஊமடாக வருவாயினைப் பெற்று வந்த மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
சன்னார் காட்டுப்பகுதியில் உள்ள பெறுமதியான மரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கை நோக்கி கொண்டு செல்லப்பட்டுகின்றது.
இதுஇவ்வாறிருக்க மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பலநூறு சிங்கள மீனவக் குடும்பங்கள் இருத்தப்பட்டுள்ளனர்.
கடற்தொழிலில் ஈடுபடும் இச்சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்க காவலரண்களை அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையினர் குறித்த கடற்பகுதியில் தமிழ் மீனவர்கள் தொழில்புரிய தடைவிதித்துள்ளனர்.

No comments:

Post a Comment