Friday, July 06, 2012

இந்தியாவின் நோக்கம் இலங்கையைப் பாதுகாப்பதே தவிர ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பது அல்ல!

இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறை ஈழத்தமிழர்களை பாதுகாப்பதில் இல்லை என்று கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரியர் தனது கருத்தோட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் முழுவிபரம்,
இலங்கையில் ஈழத் தமிழர்கள் என்றவொரு இனம் பல வருடங்களாக அங்கு ஆட்சியில் உள்ள பெரும்பான்மை இனம் சார்ந்த முதலாளித்துவ அரசு ஒன்றினால் அடக்கி ஒடுக்கப்படுவதும், சில வருட இடைவெளிகளில் அங்கு பெரும்பான்மையினத்தைச் சார்ந்த இனவாதிகளாலும் பௌத்த பிக்குகளாலும் இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்படுவதும் அதனால் அங்கு பல இடங்களில் வாழும் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும்
அழிக்கப்படுவதும் கொள்ளையிடப்படுவதும் தமிழர் பிரதேசங்களுக்கு பாதிக்கப்பட்ட தமிழர்கள் கப்பல்கள் மூலம் அனுப்பப்படுவதும், நமது அயல் நாடான இந்தியா உட்பட பல மேற்குலக நாடுகளும் அறிந்த உண்மையாகும்.
இலங்கையில் தமிழ் மக்கள் தாக்கப்படும்போது, தமிழர்களின் தலைவர்களான தந்தை செல்வா அவருக்குப் பின்னர் வந்த "தளபதி" அமிர்தலிங்கம் போன்றவர்கள் கூட இந்தியாவையும் அதன் தலைவர்களையும் தான் நாடிச் சென்று தமது மக்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றார்கள்.
மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, அவரைத் தொடர்ந்து காலஞ்சென்ற ராஜிவ் காந்தி ஆகியோரிடத்தில் சென்று தமிழர்களைக் காப்பாற்றும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏராளம். ஆனால் இவற்றால் நமது மக்களுக்கு கிடைத்த பலன் என்பது என்ன?
இலங்கையில் தமிழர்களின் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விடுதலை என்பது மிக அவசியம் என்பதை உணர்ந்த அன்னை இந்திரா காந்தி தன்னால் ஆனவற்றைச் செய்ய முனைந்தார். ஆனால் அவருக்குப் பின்னர் வந்த ராஜிவ் காந்தி நமது தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவிற்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி சில காலத்தில் அவரையும் இந்தியா இழக்க வேண்டிவந்தது.
இவ்வாறாக நமது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தேவைகள் தொடர்பாக நாம் கவனித்தால், நமது விடுதலைப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததை நமக்கு செய்த உதவி என்று கருதினாலும், விடுதலை உணர்வு கொண்டு எழுந்த இளம் இரத்தங்களான நமது போராளிகளை பிரித்து வைத்து அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றும் வகையில் செயற்பட்டு அதன் உள்நோக்கமாக அப்போது நமது தாயக மண்ணில் பல விடுதலை இயக்கங்களை தோற்றுவித்து அவற்றுக்கு தனித்தனியாக பயிற்சியளித்து பின்னர் இயக்கங்களை தமக்குள் மோதவிட்டு, இறுதியாக பல்வேறு பலம் பொருந்திய விடுதலை அமைப்பாக இருந்த விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் முள்ளிவாய்க்கால் வரை சென்று அழித்தது தான் இந்தியா நமது ஈழத்தமிழ் மக்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் செய்த "ஆதரவு" என்றுதான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
இது இவ்வாறிருக்க, தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினைகளை இராணுவத் தீரவுக்கு பதிலாக அரசியல் தீர்வாக நாம் கண்டு நாம் அதனை தீர்த்து வைப்போம் என்று கூறிக்கொண்டு தற்போது இலங்கையின் முப்படைகளுக்கும் இந்தியா நவீன போர்க்கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகளை அளித்து வருவது தற்போது வெளிப்படையாக தெரியும் ஒன்றாகவே உள்ளது.
தற்போது இலங்கையின் விமானப்படையினருக்கு இந்தியாவின் தமிழர் மாநிலமான தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னையில் உள்ள தாம்பரம் விமானப் படைத்தளத்தில் பயிற்சிகள் வழங்கும் இலங்கை இந்திய அரசுகளினால் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயங்கள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. மேற்படி இந்திய அரசின் நடவடிக்கைகளை தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதாவும் கண்டித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களை தாக்கிவரும் இலங்கையின் முப்படையிருக்கு தமிழகத்தில் பயிற்சியா? என்ற கேள்வியும், இந்து சமுத்திரத்தில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழகத்தின் மீனவர்களை கொன்றொழித்து வரும் இலங்கையின் முப்படையினருக்கு எவ்வாறு ஒரு தமிழர் மாநிலத்தில் இராணுவப் பயிற்சி வழங்க இயலும் என்ற கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்த கபடத்தனம் மிகுந்த போக்கைப் பார்க்கும் போது, பல வழிகளில் நமது மக்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என்றே நாம் கருத வேண்டும்.
ஒரு பக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்த்தைகளை நடத்துவது போன்று பாசாங்கு செய்யுங்கள் என்று இலங்கை அரசிடம் கூறிவிட்டு, இலங்கையில் தனது தலையை விடும் முயற்சிகளுக்கு பிரதிபலனாக இராணுவப்பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகின்றது.
இந்த வகையான இந்தியாவின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது இன்னும் ஓரிரு வருடங்களில் இந்தியாவின் கபடத்தனம் நன்கு புலப்படும். அதே வேளையில், நமது தமிழ் மக்களை பாதுகாப்பதிலும் பார்க்க இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதிலேயே அதிக கவனஞ் செலுத்தி வந்துள்ள உண்மையை நாம் கண்டு கொள்ளலாம் என்றே நாம் கருதுகின்றோம்.
அந்த நேரத்தில் இந்தியாவை தொடர்ச்சியாக நம்பி ஏமாந்தவர்களாக நமது தமிழ் மக்கள் மேலும் கண்ணீர் வடிப்பார்கள் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment