Tuesday, August 21, 2012

முத்துக்குமார், செங்கொடி தியாகத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் - நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான்: இன உணர்வாளர் சத்யராஜ்.

மரண தண்டனைக்கு எதிரான இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் ...
இந்தப் படத்தை பார்க்கும்போது, செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. உங்களுடைய உழைப்பு எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி. களத்தில் இறங்கி போராடுகிற ஒரு களப்போராளியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை. அப்படி ஒரு தைரியம் உண்மையிலேயே இல்லை. சூழ்நிலை, சிறைக்குப் போக தயார்தான், சினிமா சூட்டிங் இருக்கு, கால்சீட், நான் போகலைன்னா அங்கு படம் எடுக்கிற 10 பேர் பொழப்பு கெட்டுப்போயிடும் என்று சொல்லுவதெல்லாம் சும்மா. ஏன் 4 படம் வேண்டாம் என்று விட்டுவிட்டு போராட வேண்டியதுதானே என்ன கெட்டுப்போய்விட்டது. அப்போ சுயநலம்.
களப் போராளிகளின் பின்னாடியாவது வந்து நிற்க வேண்டும். அதுவும் செய்யவில்லை என்றால், தமிழனாக இருப்பதற்கு லாயிக்கில்லை.
முத்துக்குமார், செங்கொடி தியாகத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான். தீக்குளிக்க ஏன் அவர்கள் ஆளானார்கள் என்றால் மிகப்பெரிய எழுச்சி தமிழத்தில் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது லண்டனில் இரண்டரை லட்சம் பேர் ஊர்வலம் போனார்கள். பல லட்சம் பேர் உள்ள தமிழகத்தில் அதுபோல் ஏன் நடத்தமுடியவில்லை. முத்துக்குமார், செங்கொடி தியாகத்த்துக்காவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப்பட வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியான நாள் எதுவென்றால் அந்த மூன்று பேரும் விடுதலை ஆன நாளாகத்தான் இருக்கும்.
இப்படிக்கு செங்கொடி ஒரு அற்புதமான படம். இருளர் சமுதாயத்தின் அவலத்தை அழகாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். இருளர் சமுதாயத்தின் அவலத்தை சொல்வதற்காகவே தனியாக ஒரு படம் எடுக்கலாம்.
இருப்பினும், செங்கொடி என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு இருளர் சமுதாயத்தின் அவலம், ஈழவிடுதலைக்கு ஆதரவு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment