Thursday, October 11, 2012

இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது! அதிதிகளாக நடத்த வேண்டும்! கவிஞர் வைரமுத்து

vairamuthu1தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களாகட்டும்,  இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
இலங்கை அகதியைப் பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’. இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது, ’’இந்த படம் ஒரு முக்கியமான விசயத்தை தொட்டுப் போகிறது.
இலங்கைக் கடலிற்குள் படகுக்குள் சுடப்பட்டுக் கிடந்த ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக் கிடக்கின்ற ஒரு சிறுவன் கடலில் அனாதையாகிறான். அவன் தமிழ்நாட்டுக் கரையில் வளர்கிறான். இதுதான் கதை.
இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் பாடலில்,
‘’மழைச்சொட்டு மண்ணில் விழுந்தால்
மண்ணகம் அதை மறுப்பதில்லை
இன்னொரு மனிதன் உள்ளவரைக்கும்
இங்கு யாரும் அகதியில்லை’’

என்று கூறியுள்ளேன்.
தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களாகட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்லவேண்டாம். இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள்.
அகதி என்ற வார்த்தைக்கும் அதிதி என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு.
அகதி என்றால் ஏதுமற்றவர். அதிதி என்றால் விருந்தாளி. நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்தவேண்டும். திரும்பிப் போய்விடுவார்கள்.
இந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பேசினார்.

No comments:

Post a Comment