தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பிரான்ஸ் தமிழர்
ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி என்றழைக்கப்படும் நடராஜா
மதீந்திரனின் கொலைக்கும் இலங்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று
பிரான்ஸுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கலாநிதி தயான் ஜயதிலக்க
தெரிவித்துள்ளார்.அத்துடன், பரிதியின் கொலைக்கும் இலங்கைக்கும் தொடர்பிருப்பதாக பிரான்ஸின் பெரிஸியன் பத்திரிகை கடந்த 13ஆம் திகதி வெளியிட்டுள்ள செய்திக்கும் மறுப்பு தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர், அச்செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பரிதியை கொலை செய்தால் 50ஆயிரம் யூரோவுடன் (86 இலட்சம் ரூபா) இலங்கைக்கான விமானச் சீட்டொன்றும் வழங்குவதாக பிரான்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், அதனுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த ஒருவருக்கு தெரிவித்திருந்ததாக மேற்படி பெரிஸியன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர் ஸ்டெபன் செலாமியை சந்திக்க தான் பலமுறை முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என்று உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உள்ளக பிரச்சினை காரணமாகவே பரிதி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த படுகொலையுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களும், இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தொடர்பில் குறித்த பத்திரிகை வெளியிட்ட செய்தியைப் போன்றதொரு தகவலை பொலிஸாருக்கு தெரிவித்திருக்கவில்லை என்று உயர்ஸ்தானிகர் ஜயதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment