Saturday, November 29, 2014

பிரபாகரனுக்கு கும்பாபிஷேகம் ஈழத் தமிழர் மீது பொலிசார் தடியடி!

புலிகளின் தலைவர் மேதகு.வே.பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி, புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் புதிய கோவிலொன்றில் கும்பாபிஷேக சமய அனுட்டானங்களில் ஈடுபட்ட ஈழத்தமிழ் அகதி முகாம் மக்கள்மீது, இந்தியப் பொலிசார் தடியடிப் பிரயோகம் செய்துள்ளதோடு, சுமார் 80 ற்கும் அதிகமானோரைக் கைது செய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சமயக் குருக்கள் உட்படப் பெண்களும், யுவதிகளும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லையில் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாம் ஒன்றில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. முகாமிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தாம் வழிபடவென அங்கு சக்தி விநாயகர் கோவில் ஒன்றைப் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் கட்டி, அதற்கு 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்ய சமயக் குருக்கள்மாரின் ஆலோசனைகேற்ப முடிவு செய்தனர். இதற்காக வல்லத்திராகோட்டை போலீசில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். பொலிசாரும் இதற்கு வாய்மூல அனுமதியையும் வழங்கியிருக்கின்றனர். காவல் துறையின் அனுமதியைத் தொடர்ந்து, செவ்வாய் கிழமை முதல் அங்கு யாக பூஜைகள் நடாத்தப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாயுள்ள நிலையில், திடீரென நள்ளிரவில் அங்கு சென்றுள்ள டி.எஸ்.பி பாலகுரு தலைமையிலான போலிசார், விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரனின் 60 வது பிறந்ததினம் என்பதாலும், வியாழக்கிழமை மாவீரர் தினம் என்பதாலும் திருக்குடமுழுக்கு இடம்பெறத் தடைவிதித்ததோடு, யாக பூஜைகளும் நடாத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் கும்பாபிஷேக ஏற்பாடு பொலிசாரின் முன் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டதால் முகாமில் உள்ளவர்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளைத் தொடர்ந்தனர். இதனை அறிந்து அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் முகாமில் உள்ளவர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி, கும்பாபிஷேகத்தை 27 ஆம் தேதிக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். முகாம் வாசிகளுடன் நல்லிணக்கம் ஏற்படத் தவறியதையடுத்து டி.எஸ்.பி பாலகுரு, யாக பூஜை நடத்திக் கொண்டிருந்த தலைமைக் குருக்களை பொலீஸ் நிலையத்திற்குச் கூட்டிச் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமைடைந்த முகாம் மக்கள் காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இதில் தமிழக அரசு தலையிட்டு திருக்குடமுழுக்கு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த டி.எஸ்.பி பாலகுரு மற்றும் உமா தலைமையிலான பொலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவிகள் மீது தடியடி நடத்தியது மட்டுமல்லாது, அவர்களைக் கைதும் செய்துள்ளனர். இந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தின்போது 42 பெண்கள் உள்பட 84 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இது குறித்து தமிழக அரசு உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இந்தப் பகுதியில் பதட்டமும் பரபரப்பும் தொடந்தும் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில், ஒரு கும்பாபிஷேகத்தைகூட தலைவர் பிறந்த நாளில் செய்ய தமிழக பொலிஸ் அனுமதிக்கவில்லை. அகதிகளை இவர்கள் அடித்தால், இவர்களுக்கும் சிங்கள பொலிசாருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது ?



[ Nov 28, 2014 03:55:30 PM | வாசித்தோர் : 26690 ]
source:athirvu

No comments:

Post a Comment