Wednesday, June 10, 2015

எல்லா அய்யனார் கோவில்களிலும் பிரபாகரன் சிலை இருக்கவேண்டும்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை !

தமிழகத்தில் உள்ள அனைத்து அய்யனார் கோவில்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலையை அமைக்க அனுமதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கும்பகோணம் சார் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தது. கும்பகோணம் நகர இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் சப்–கலெக்டர் கோவிந்தராவிடம் மாநில இளைஞரணி பொதுச்செயலர் குருமூர்த்தி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் கீழத்தெருவில் உள்ள சேவுகராய அய்யனார் கோவிலில் அமைக்கப்பட்ட பிரபாகரன் சிலையை காவல்துறையினர் அகற்றி அதனை நிறுவிய மக்களை அச்சுறுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டுவது கண்டனத்துக்குரியது.

வழிபாட்டுத் தலங்களில் அவர்கள் விருப்பப்பட்ட மூதாதையர் படங்கள், கடவுளின் சிலைகளை வைத்து வணங்குவது வழக்கம். அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அய்யனார் கோயில்களில் வீரன் சிலை அமைப்பது வழக்கம். அந்த வகையில் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி பல்வேறு இன்னல்களை நீக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தமிழர்கள் வீரராக போற்றுவதும், அவரை வழிபடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள கோவிலில் அவரின் சிலை அமைத்து வழிபட்டு வந்தனர். தற்போது அந்த சிலை அகற்றப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் படத்தை பயன்படுத்துவது சட்டப்படி தவறு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அய்யனார் கோவில்களிலும் பிரபாகரன் சிலையை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment