Thursday, December 16, 2010

ஊழல் இலஞ்சம் நிறைந்த இந்தியாவில் நிரா ராடியா யார்…??? அவரது பின்னணி என்ன…???

 நிரா ராடியா ஒரு மக்கள் தொடர்பு ஆலோசகர்; கம்பெனிகளின் தொடர்பு அதிகாரி. வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன், நியோசிஸ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் சர்வீசஸ், விட்காம் கன்சல்டிங் மற்றும் நியோகாம் கன்சல்டிங் என்ற நான்கு நிறுவனங்களை நடத்தி வந்தார்.

அன்னிய உளவு நிறுவனங்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதாகவும், தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும், 2007ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்திற்கு புகார் வந்ததை அடுத்து, 2008ம் ஆண்டில் இவரது தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஒன்பது ஆண்டுகளில், 300 கோடி ரூபாய் அளவுக்கு இவர் சம்பாதித்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டதால், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் இவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வருமான வரித்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. பத்திரிகையாளர்கள் உட்பட சிலருடன் இவர் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, கடந்த சில வாரங்களாக இவரது செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

இந்நிலையில், நிரா ராடியாவுக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சிலருக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தருவது, தொலைத்தொடர்பு உட்பட, சில அரசு கொள்கைகளை மாற்றம் செய்வதிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளது, அவரது தொலைபேசி உரையாடல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கென்யாவில் பிறந்த நிரா ராடியா, 1970ம் ஆண்டுகளில் லண்டனுக்கு சென்று, பள்ளிக் கல்வி பயின்றார். வார்விக் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பிரிட்டன் வர்த்தகர் ஜானக் ராடியாவை மணந்த அவர், பின்னர் அவரை விவாகரத்து செய்தார். 90ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்தார். சகாரா நிறுவன தொடர்பு அதிகாரியாக இந்தியாவில் தன் பணியைத் துவக்கிய அவர், பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உட்பட சில விமான நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியானார். அப்போது தான் அவருக்கும், அரசு மற்றும் மீடியா துறையில் உள்ளவர்களுக்கும் இடையே நட்பு உருவானது.
கடந்த 2000ம் ஆண்டில், “கிரவுன் ஏர்’ என்ற விமான நிறுவனத்தை துவக்க முற்பட்டார். ஆனால், அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. 2001ம் ஆண்டில் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை அமைத்தார். அதைத் தொடர்ந்து மேலும் மூன்று ஆலோசனை நிறுவனங்களை துவக்கினார். அதே ஆண்டில், டாடா குழுமத்தில் உள்ள 90 நிறுவனங்களையும் தங்கள் நிறுவன வாடிக்கையாளராகச் சேர்த்தார். அதன் பின், 2008ம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இவரது வாடிக்கையாளரானது.

பிரதீப் பைஜால்: நிரா ராடியா வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது போலவே, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் சொந்தமான கட்டடங்களிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ரூர்கி ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ., ஹானர்ஸ் பட்டம் பெற்ற பைஜால், 1996ம் ஆண்டில் மத்திய பிரதேச பிரிவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்றார். 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பொதுத்துறை பங்குகள் விற்பனை துறையின் செயலராக இருந்தார். 2004ம் ஆண்டில் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக பொறுப்பேற்றார். 2008ம் ஆண்டில் இந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். டிராய் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், நிரா ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 2009ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். கடந்த 2007ம் ஆண்டில் நிரா ராடியா, நியோசிஸ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தை அமைத்த போது, அதில் ஒரு பங்குதாரராக சேர்ந்தார். தற்போது அந்த நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இதுதவிர, வேறு பல கம்பெனிகளின் இயக்குனர்கள் குழுமத்திலும் இடம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment