நாடுகடந்த அமைப்புகள் பல வடிவங்களில் ஏற்கெனவே இருந்தாலும் முதலில் ஒரு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியது ஈழத் தமிழர்தான் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் 33வது வருட பொதுக்கூட்டத்தின் போது நடைபெற்ற தமிழர் சங்கமம் நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு:
ஊடக அறிக்கை
நெவெம்பர்08, 2010

தமிழர் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்களின் சிறப்புரை!
2010ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 20ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் 33வது வருட பொதுக்கூட்டத்தின் போது நடைபெற்ற தமிழர் சங்கமம் நிகழ்ச்சியில் ஒரு பிரத்தியேகச் சொற்பொழிவை ஆற்றினார்.

அதில் புலம்பெயர் தமிழரின் குரலைப் பிரதிபலிக்கும் அரசியல் அமைப்பாக வெளிப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள், சாணக்கியச் செயற்பாடுகள் பற்றித் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் பேசியுள்ளார். தமிழருக்கு இலங்கைத் தீவுக்கு வெளியே ஒரு அரசியல் வெளியை உருவாக்க வேண்டிய யதார்த்தமான அவசியத்தையும் தார்மீக நியாயத்தன்மையையும் அவர் வலியுறித்தினார்.

அவர் தனது உரையில் நாடுகடந்த அமைப்புகள் பல வடிவங்களில் ஏற்கெனவே இருந்தாலும் முதலில் ஒரு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியது ஈழத் தமிழர்தான் எனக்குறிப்பிட்டார். சர்வதேச அரசாங்கங்களிடையே நாடுகடந்த ஆட்சி பற்றிய கருத்தாடல்கள் இருந்தாலும், அவை நாடுகளை மையப்படுத்தியே உள்ளன.

ஆனால் நாம் அமைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்திற்கு சர்வதேச ஆட்சிமுறையில் தமது அரசியல் அபிலாஷைகளை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு வாகனமாக அமைவதில் அது வேறுபட்டு நிற்கிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களான குர்திஸ்(முரசனள) இனத்தவர் மற்றும் பாலஸ்தீனியர்கள் போன்றவர்களுக்கும் தமது போராட்டத்தை முன்னகர்த்த இது ஒரு மாதிரி அமைப்பாக அமைந்துள்ளதாகச் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள சர்வதேச அரசியல் முறைமைகள் அரசுகளுக்கே பக்கச் சார்பாக இருப்பதாகவும் ஆனால் தமிழரால் முன்வைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்பு சர்வதேச ஆட்சி முறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு உந்து சத்தியாக இருக்கும் எனக்கூறினார். வன்னியில் இலங்கை அரசின் கொடுமையான இராணுவ நடவடிக்கை சர்வதேச சட்டத்தின் இன அழிப்பு வரையறைக்குள் அடங்குமென்று பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் குறிப்பிட்டார், மேலும் தமிழ்ப்பெண்கள் கருச்சிதைப்புக்கும், நிதந்தரமாகவே தாய்மையுறாவண்ணம் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்படுவதற்கான சாட்சியங்கள் இப்போது அதிகமாகவே வந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்புப் பற்றிக்கூறுகையில் அதில் மனித கௌரவமானது மீறப்பட முடியாத ஒன்றாக உள்ளடக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன் வாக்காளரும் பிரதிநிதிகளும் ஈழத்தோடு தொடர்புடையவர்களாய் இருப்பவர்கள் மட்டுமன்றி தம்மை ஈழத்தவராக அடையாளப்படுத்திக் கொள்பவர்களையும் உள்வாங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பானது ஈழத் தமிழரின் அடையாளத்தை சர்வதேசத் தன்மையோடு தேசியத்தைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை உருவாக்கம் பற்றிக் குறிப்பிடுகையில் அமைச்சர்கள் தமது பதவிகள் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தமிழ் ஈழ மக்களின் தொண்டர்கள், ஈழ தேசத்தின் காவலர்கள் என்றும் கூறினார்.

சிறிலங்கா அரசின் தீவிரமான குடியேற்றங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழர் தென்னிலங்கையில் தாமே குடியமர்வதையும் சிங்களவர்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றுவதையும் ஒப்பிட முடியா என்றார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளிநாட்டு அரசுகளுடன் இணைந்து அந்தக் குடியேற்றங்களை நிறுத்தவும் மீளப் பெறவும் வழிவகைகளைக் கண்டறியப் பாடுபடும் எனவும் கூறினார்.

சிறிலங்கா அரசு செய்ய எத்தனிப்பதுபோல் புனர்நிர்மாணங்கள் அரசியலைப் புறம்தள்ளிச் செய்ய முடியாதெனவும் தற்போதுள்ள நிலைமை ஒரு முடிவடைந்த போரின் பின்னான நிலையே தவிர ஒரு முரண்பாடுகளின் நிலையல்ல என்றும் விளக்கினார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய நிலை எதுவென்றால் வெளிநாட்டு அரசுகளின் செயற்பாடுகள் மூலம் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதுதான். இது பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென்றார்.
நாடுகடந்த தமிழீழ அரசங்கத்திற்கான அரசியல் இலக்கு இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத்தை அமைப்பதுதான் என்று கூறிய திரு விசுவநாதன் ருத்ரகுமாரன், மக்களின் ஜனநாயக வழிமுறையையும் சுய நிர்ணய உரிமையையும் சுட்டிக்காட்டி, அவற்றுடன் அண்மைக்கால இன அழிப்பின் காரணமாக தமிழீழ அரசை ஆதரிக்க வேண்டிய கடப்பாடு சர்வதேச சமூகத்திற்கு சட்டபூர்வமாகவும் தார்மீக பூர்வமாகவும் உண்டு என்று வலியுறித்தினார்.

“Monsoon- The Indian Ocean and the future of American power.” என்ற திரு ராபர்ட் கப்பிலானுடைய (Mr.Robert Kaplan) புதிய புத்தகத்தையும் காலம்சென்ற அமரர் சிவராமின் முன்வைப்புகளையும் எடுத்து விளக்கி இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படுகின்ற ஆதிக்க நகர்வுகளைப் பற்றியும் பேசினார். அமையப்போகும் தமிழ் ஈழம் இப்பிராந்தியத்தின் சமநிலைக்கும் சமாதானத்திற்கும் உதவியாய் இருக்குமென்றும் விளக்கினார்.

சுதந்திர தமிழீழத்தை அமைப்பதற்கு இருக்கின்ற வாய்ப்புகளை எடுத்துக்காட்டிய பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இருக்கின்ற சவால்களையும் சுட்டிக்காட்டினார். இன்றைய அனைத்துலக ஒழுங்கு முறையானது அரசுகளுக்கிடையேயான உறவுகளில் தங்கியிருக்கிறது என்றும் அதன் காரணமாக அந்த அரசுகள் தற்போதுள்ள உறவு நிலையைப் பேணுவதில் அவற்றுக்கு தனியான நலம் இருக்கிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சுதந்திரத் தன்மையைப் பேணும் அதே சமயம் பன்னாட்டு சமூக நலனோடு எமது நலனும் எப்படி ஒருமுகப்படுத்த முடியுமென்று அவர்களை நம்பவைக்க அயராது உழைக்கும் என்றும் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் கூறினார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு உருவாக்கத்திற்கான தொடர்ச்சியான பல கருத்துப் பரிமாறல் அறிக்கைகளை வழங்கி ஒரு தேசிய கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் கூறினார்.

இறுதியில் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை விதந்துரைத்து, சகல நாடுகளிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உணர்வாளர்களாக அவர்களின் பேராதரவை வேண்டி தமது உரையை நிறைவு செய்தார்.

செயலகம்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்