சிறீலங்கா அரச தலைவரும் பிரதம போர்க்குற்றவாளியுமான மகிந்தா ராஜபக்சாவை பிரித்தானியாவில் கைது செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டத்தால் அதிர்ச்சியடைந்து தப்பியோடிய மகிந்தா மலேசியாவில் கூட விமானத்தை தரையிறங்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

பிரித்தானியாவில் இருந்து தப்பியோடிய மகிந்தா பயணித்த சிறீலங்கன் எயர் லைன் விமானம் மலேசியா வழியாகவே சிறீலங்கா சென்றது. அதனால் மலேசியா செல்லும் வெளிநாட்டவரும் அதில் பயணித்தனர்.
ஆனால் மிகவும் அச்சமடைந்து காணப்பட்ட மகிந்தா விமானத்தை மலேசியாவில் தரையிறக்க அனுமதிக்கவில்லை. நேரடியாக சிறீலங்காவுக்கு விமானத்தை செலுத்துமாறு விமானிகளை பணித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தமது விசனத்தை தெரிவித்ததுடன், லண்டனில் இருந்து மலேசியா செல்வதற்கு 10 மணிநேரம் எடுக்கும்போது, தற்போது சிறீலங்கா சென்று மீண்டும் மலேசியா செல்வதற்கு மேலதிகமாக 5 மணிநேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளனர்.

எனினும் பயணிகள் சந்தித்துள்ள இந்த துன்பத்திற்கு பரிகாரமாக அவர்களின் விமானக்கட்டணத்தில் 50 விகிதத்தை மீண்டும் திருப்பி தருவதாக தெரிவித்த அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ், பயணிகளுக்கு சிறப்பு உணவுகளையும், அளவுக்கதிகமான மதுபானங்களையும் வழங்க உத்தரவிட்டதாகம் தெரிவிக்கப்படுகின்றது.