Monday, December 13, 2010

One Response to “ ஒரு நாடு, இரு இனங்கள்: பிரிட்டனின் த எக்கனோமிஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாக தினக்குரல் தெரிவித்துள்ளது ”

விரக்தியுடன் இருக்கும் அகதிகளைப் போலல்லாமல் அவர்களைப் பார்க்கும் போது ஏற்பாடு செய்யப்பட்ட குடியேற்றத்தினால் உட்சாகப்படுத்தப்பட்டவர்களைப் போன்று உள்ளார்கள். வட இலங்கை நகரமான யாழ்ப்பாணத்திலுள்ள புகையிரத நிலையத்திற்கு கடந்த மாதம் வருகை தந்திருந்த சுமார் 600 சிங்களவர்கள் தொடர்பாக அநேகமான உள்ளூர்த் தமிழர்களின் அபிப்பிராயம் ஏற்பாடு செய்யப்பட்ட குடியேற்ற நடவடிக்கை என்பதாகவே காணப்படுகிறது என்று பிரிட்டனின் த எக்கனோமிஸ்ட் பத்திரிகைதெரிவித்துள்ளது.

ஒரு நாடு இரு இனங்கள் என்ற தலைப்பில் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டிருப்பதாவது; தென்பகுதியில் தங்கியிருந்துவிட்டு திரும்பவும் வீட்டிற்கு வருவது போல புதியவர்களின் வருகை காணப்படுகிறது. அவர்கள் இப்போது நாவற்குழியில் அதாவது நகருக்கு வெளியேயுள்ள பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தொழில்வாய்ப்பின்மை குறித்து அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழைகாலம் அண்மித்து வருவது குறித்து அவர்கள் கவலை கொண்டுள்ளனர். ஆனால், அங்கு தொடர்ந்து தங்கியிருக்கப்போவதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

உள்ளூர் மக்களின் சந்தேகங்கள் ஒரு விடயத்தை முன்வைப்பதாகக் காணப்படுகிறது. கடந்த வருடம் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அரசாங்கம் வெற்றிகண்டிருந்தது. தமிழ்த் தாயகத்திற்கான அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. அந்த வெற்றி இன்னரும் பூர்த்தியடையவில்லையென்பதை தமிழர்களின் சந்தேகங்கள் வெளிப்படுத்துபவையாகக் காணப்படுகின்றன. அநேகமான தமிழர்களில் பலர் புலிகளின் கொடூரத்தனத்திற்கு அஞ்சியிருந்த போதும், தோற்கடிக்கப்பட்ட உணர்வை அவர்கள் கொண்டுள்ளனர். திரும்பத் திரும்பக் கூறப்படும் அரசாங்கத்தின் கொள்கையிலும் பார்க்க தேசிய நல்லிணக்கமானது இப்போதும் அதிகளவுக்கு தேவைப்படுவதாக தென்படுகிறது.
தெற்கில் பெரும்பான்மையான பௌத்த சிங்களவர்கள் மத்தியில் நவம்பர் 19 இல் தனது 2 ஆவது பதவிக்காலத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காகப் பரந்தளவில் மக்கள் செல்வாக்கை அவர் பெற்றுள்ளார். அவரின் மூன்று சகோதரர்கள், மகன், சகோதரரின் மகன் ஆகியோர் அரசியல் பங்களிப்பில் முன்னணி வகிக்கின்றனர். அவரின் குடும்பம் அநேகமாக சகல அதிகாரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அவரின் ஒரேயொரு அரசியல் பகையாளியான முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டவருமான சரத் பொன்சேகா உள்ளார். அவர் இப்போது சிறையில் இருக்கின்றார்.

பயத்தினால் தம்மைத் தாமே தணிக்கைக்குட்படுத்துவதை ஊடகவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவசரகால நிலைமை இப்போதும் அமுலில் உள்ளது. பதவிக் கால வரையறை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பரிசீலிக்கும் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாட்டை அரசாங்கம் திருத்தியுள்ளது.

எவ்வாறாயினும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு வைபவத்தின் போது ஜனாதிபதியின் உருவப்படங்கள் குறைவாகக் காணப்பட்டன. தெற்கில் சகல இடங்களிலும் அது பரவலாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தமது மக்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக உள்ளூர் அரசியல்வாதிகள் பார்க்கின்றனர். அதிகாரப் பகிர்வு தொடர்பான வாக்குறுதிகளை அவர்கள் அதிகளவுக்கு நம்பிக்கையுடன் பார்க்கவில்லை. பிரபாகரனுக்கு நாம் கொடுக்க மறுத்ததை ஏனையவர்களுக்குக் கொடுக்க மாட்டோம் என்பதைத் தமிழ்க் கட்சிகள் விளங்கிக்கொள்வது அவசியமென ஜனாதிபதி அண்மைய பேட்டியில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாதுகாப்பை அதிகரிப்பதன் மூலமும் மக்களை நகர்த்துவதன் மூலமும் தமிழ்த் தேசிய வாதத்தைத் தடுப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் நம்புகின்றனர். தெற்கிலிருந்து 183 குடும்பங்களின் வருகையைத் தொடர்ந்து அவர்களின் பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன வன்செயலினால் 1983 இற்குப் பின்னர் தாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதாக இந்த சிங்களவர்கள் கூறுகின்றனர். ஆனால், தாங்கள் இந்த வருடங்களில் ஒவ்வொருவருடனும் தொடர்புகளை வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் அரைவாசிப் போர் 1983 இற்இப் பின்னர் பிறந்தவர்களாகும். அவர்கள் ஒருபோதும் வடக்கிற்கு வந்திருக்கவில்லை. இப்போது யாழ்ப்பாணம் அமைதியாக இருப்பதாகக் கேள்விப்பட்டு பஸ்களை ஏற்பாடு செய்து ஒன்றாக வந்துள்ளனர்.
 
இவ்வாறு அவர்கள் செய்திருப்பது முற்றுமுழுதாக சுயவிருப்பத்தின் பேரிலா என்பதை நம்புவதற்குக் கடினமானதாகும். முழு அளவிலான குடியேற்றத்திட்டமென இது நோக்கப்படுகிறது. ஆதலால் அரசாங்கத்தின் மீது அதிகளவில் நம்பிக்கையீனத்தைத் தமிழர்கள் வெளிப்படுத்துகின்றனர். அத்துடன், இராணுவம் நிரந்தர நிலைகளை வடக்கில் அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஊகிக்கப்படுகிறது. படையினரிடம் இணைந்துகொள்வதற்காக அவர்களின் குடும்பங்களை நகர்த்துவதற்கான நடவடிக்கையென ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்த வாரம் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிகளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தில் வெற்றியடைந்த படையினரை வீட்டிற்கு அனுப்ப முடியாதென அரச தரப்பில் கூறப்படுகிறது. உள்நாட்டு யுத்தம் விட்டுச் சென்றவற்றில் பரஸ்பர நம்பிக்கையீனம் தவிர்க்க முடியாததொன்றாகக் காணப்படுகிறது. இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற சர்வதேச கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சாட்சியத்தை கேட்கும் நோக்கத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முன்னணியிலுள்ள சர்வதேச உள்ளூர் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மறுத்துள்ளன. இது நம்பகத்தன்மையைக் குறைவாக்கியிருப்பதாக நோக்கப்படுகிறது.

இந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் உள்ள அலுவலகங்களை மூடுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது. வட பகுதிக்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அபூர்வமாகவே அனுமதியளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூட யுத்தத்திலும் பார்க்க சமாதானம் சிறப்பானதெனக் கூறுகின்றனர். முகாம்களுக்குள் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை காலவரையறையற்ற விதத்தில் வைக்கத் திட்டமிடப்படுவதாகக் குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே

3 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறிவிட்டனர். ஆயினும் அவர்களில் பலர் இன்னரும் தங்கள் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கருகிலுள்ள பலாலியிலிருந்து 1990 இல் இடம்பெயர்ந்தவர் 38 வயதான இந்து மத குருவான அசோக் என்பவராகும். அவர் பின்னர் 1995 வரை யாழ்ப்பாணத்தில் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்துள்ளார். 2009 இல் அவர் யுத்தத்தின் இறுதிநாட்களின் போது தப்பிச் சென்று முகாமில் இருந்துள்ளார். யாழ்ப்பாணத்திற்குச் திரும்பிச் சென்றுள்ள அவர் ஒரு நாள் பலாலிக்கு திரும்பிச் செல்ல முடியுமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்.
இந்த மாதிரியான கதைகள் நல்லிணக்கம் ஏன் கடினமானது என்பதை விளங்கப்படுத்துவதற்கு உதவுகின்றன. முயற்சி செய்தாலும் கூட ஏன் தோல்வியடைகின்றது என்பதை விளங்குபவவையாக இவை உள்ளன.

இலங்கையின் மற்றொரு பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் வார்த்தைகளில் கூறுவதானால் இது மற்றொரு பயங்கரவாத இயக்கத்தை அழைப்பது போன்றதாகும். ஆயினும் ஆனால், இராணுவத்தின் வெற்றியானது அந்த அபாய நிலை ஏற்படுவதற்கு மிகவும் சிறியதொன்றாகவே தோன்றுகிறது. இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் காஷ்மீர், திபெத் போன்ற பகுதிகளிலுள்ள உள்ளூர்ப் பொதுமக்கள் தமது இணக்கமின்மையை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால், இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதானது உன்னதமான எதிர்காலத்தை ஏற்படுத்துமென்று இலங்கையிலுள்ள நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment