Tuesday, May 17, 2011

போரின் இறுதியில் 40, 000 பொது மக்கள் கொலை! பாதுகாப்புச் சபையில் ஐநாவின் கருத்துக்கு அரசு எதிர்ப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, பாதுகாப்புச் சபையில் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பரோனெஸ் வலேரி ஆமொஸ் அம்மையார் வெளியிட்ட கருத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச்சபையில் கடந்த செவ்வாயன்று ‘பொதுமக்களின் பாதுகாப்பு‘ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வலேரி ஆமோஸ் அம்மையார் தெரிவித்த கருத்து தொடர்பில் அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கருத்து உறுதிசெய்யப்படாத புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டது.

அவரது இந்தக் கருத்து ஐ.நாவின் நிபுணர் குழுவினது அறிக்கையின் அடிப்படையிலானது. ஐ.நா பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை தாம் நிராகரித்து விட்டோம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

சரியான தகவலைக் கொண்டிருக்கவில்லை என்பதால் ஏற்றுக் கொள்ளாத அந்த அறிக்கையை வலேரி ஆமொஸ் அம்மையார் மேற்கோள்காட்டியுள்ளார். இதுதொடர்பாக அரசாங்கம் ஐ.நாவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

உணர்ச்சி வசப்பட்டு குற்றம்சாட்டியுள்ளதாகவும், ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் அவர் புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவின் சாசனங்களைப் பாதுகாக்கும் ஒர் ஐ.நா அதிகாரி போல் அன்றி, வலேரி ஆமொஸ் அம்மையார் ஒரு துணைவலிமை கொடுக்கும் பாத்திரத்தை வகிப்பதாகவும் அரசாங்கம் மேலும் குற்றம்சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment