Wednesday, December 08, 2010

சீமான் வழக்கில் நீதிபதிகள் மாற்றம்

டைரக்டர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜேம்ஸ்பீட்டர் தலைமை நீதிபதி இக்பாலிடம் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

சீமான் கைதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது.

எனவே இந்த நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லை. இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேம்ஸ் பீட்டர் தரப்பு வக்கீல். சந்திரசேகரன் ஆஜராகி, நாங்கள் இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற கோரி தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளார் என்றார். அதன் நகலை நீதிபதிகளிடம் காட்டினார்.

இதை படித்து பார்த்த நீதிபதிகள் சீமான் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதியிடம் திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இவ்வழக்கு வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது.

No comments:

Post a Comment