அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்காக பாலித்தீவு சென்றுள்ள ஜீ.எல்.பீரிஸ், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.
எனினும் நேற்றுவரை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் எகிப்து வெளிவிவகார அமைச்சர் நபில் அல் அராபியை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்துள்ளது.
எகிப்து வெளிவிகார அமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, ருமேனிய வெளிவிவகார அமைச்சர் டொரு கோஸ்ரியாவை ருமேனியாவில் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை உறுதிசெய்யப்படாத நிச்சயமற்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்றும் அறிக்கை குறித்த இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ருடமேனிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
120 நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களையே இதுவரை சந்திக்க முடிந்துள்ளது.
ஜீ.எல்.பீரிஸின், இதுவரை நடத்திய வெளிவிவகார அமைச்சர்களுடனான சந்திப்புக்களில் பெரும்பாலான நாடுகள் இருதரப்பு, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார, வர்த்தக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குமே இந்தச் முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
No comments:
Post a Comment