Monday, May 30, 2011

இலங்கையின் போர்க்கருத்தரங்கை தென்கொரியா புறக்கணிக்க வேண்டும்! பிரட் அடம்ஸ்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல ஆயிரம் பொதுமக்களை அழித்த இராணுவத்தினரின் போர்க்கருத்தரங்கில் தென்கொரியா பங்கேற்கக்கூடாது என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘ஜுங்அங் டெய்லி‘ என்ற தென்கொரிய ஊடகத்திற்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல ஆயிரம் பொதுமக்களை அழித்தமை, வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தியமை, சர்வதேச உதவி நிறுவனங்கள், கண்காணிப்புக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற மனிதஉரிமை மீறல்களை இலங்கை மேற்கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதஉரிமைமீறல் மேற்கொண்ட இராணுவத்தின் போர்க்கருத்தரங்கை ஏனைய நாடுகளுடன் இணைந்து தென்கொரியாவும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் மோசமான முன்னுதாரணத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கை அமெரிக்கா, கனடா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அவுஸ்ரேலியா போன்றவற்றுடன் இணைந்து தென்கொரியாவும் புறக்கணிக்க வேண்டும் என்றும்  பிரட் அடம்ஸ் கோரியுள்ளார்.

தென்கொரியா இதில் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்றாலும் கூட, போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு தென்கொரியா அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment